A/L 2014 MCQ – வினா 05 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 05

பின்வரும் கூற்றுக்களில் எது கூட்டு நுணுக்குக்காட்டி பற்றி உண்மையானதன்று.
    1. (1)  அது இரு குவிவு வில்லைகளைக் கொண்டது.
    2. (2)  பொருளியினால் உண்டாக்கப்படும் பொருளின் விம்பம் மெய் விம்பமாகும்.
    3. (3)  வில்லைகளின் வேறாக்கம் பொருளியின் அல்லது பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் பார்க்க மிகவும் கூடியதாகும்.
    4. (4)  நுணுக்குக்காட்டியினால் உண்டாக்கப்படும் இறுதி விம்பம் மாய விம்பமாகும்.
    5. (5)  பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்.
சரியான விடை: (5)
கூட்டுநுணுக்குக்காட்டியின் இயல்பான செப்பஞ்செய்கைக்குரிய கதிர்வரிப் படம்.
கூட்டுநுணுக்குக் காட்டியானது, பொதுவாக சாதாரண மனிதக் கண்ணுக்கு தென்படாத மிகச் சிறிய பொருட்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பொருளி, பார்வைத்துண்டு என்னும் இரண்டு இரு குவிவு வில்லைகளைக் கொண்டது. பொருளி வில்லை பார்வைத்துண்டிலும் பார்க்க சிறியதாக இருக்கும். அத்துடன், பொருளியின் குவியத்தூரமானது, பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் சிறியதாக இருக்கும். இரண்டு வில்லைகளினதும் வேறாக்கமானது, இவ்விரண்டு வில்லைகளினதும் குவியத்தூரங்களினதும் கூட்டுத்தொகையிலும் பார்க்க பெரிதாக இருக்கும்.

கூட்டுநுணுக்குக்காட்டியின் பொருளியின் முன்னாள் வைக்கப்படும் பொருளுக்கு, பொருளி தலைகீழான உருப்பெருத்த மெய் விம்பத்தை உருவாக்கும். பொருளியினால் உருவாக்கப்படும் மெய் விம்பமானது, பார்வைத்துண்டின் குவியத்தூரத்தினுள் இருக்குமாறு கருவி அமைக்கப்படும். பார்வைத்துண்டானது, உருப்பெருத்த இறுதி விம்பத்தை, (மாய விம்பத்தை) தோற்றுவிக்கும்.

இறுதிவிம்பமானது, தெளிவுப்பார்வை இழிவுத்தூரத்தில் உருவாக்கப்படும்போது அதிகூடிய உருப்பெருக்கம் உடைய இறுதிவிம்பம் பெறப்படும். இது கூட்டுநுணுக்குக்காட்டியின் இயல்பான செப்பஞ்செய்கை எனப்படும்.

வினாவில் தரப்பட்ட கூற்றுக்களில், "பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்." என்பது தவறானது. பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்திற்கு வெளியே வைக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் பொருளியினால், உருப்பெருத்த மெய் விம்பத்தை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment